மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் பெரும் பொங்கல் விழா – 2023
மடிக்கனியும் பிடி கொசுவமும் கொண்டை பூவும் தந்து ஆசீர்வாதம் செய்த சத்தியத்தாய் நம் அன்னை மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன், கொங்கு குலாலர் 24 நாடு, 8 ஊர்களில் நம் அண்ணன்மார்கள் “மூன்று அண்ணன்மார்கள்” என்ற சரித்திர பெயர் பெற்று 200 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து அண்ணன்மார்களும் இணைந்து நடத்துகின்ற பெருவிழா ஸ்ரீவள்ளியம்மன் நம்பியண்ணன் பொங்கல் விழா.
வரலாற்று நிகழ்வு:
இப் பெருவிழா பல நூற்றாண்டுகளாய் கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த நூற்றாண்டின் 2-வது பெரும் பொங்கல் விழா- 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் சுபக்கிருது ஆண்டு மாசி திங்கள் 18 மற்றும் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இப் பொங்கல் விழா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்படவிருந்த சூழ்நிலையில், உலக அளவில் பரவிய கொரோனா பெரும் தொற்று காரணமாக சற்று காலம் தள்ளி நடத்தப்பட்டது. இருப்பினும் மதிப்பிற்குரிய நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆகியோரது பேராதரவோடு நடைபெற்ற பொங்கல் விழாவில் வரலாறு காணாத அளவுக்கு ஏறக்குறைய 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டு சிறப்பித்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
பொங்கல் நாள் நிர்ணயித்தல்:
நம் குல தெய்வத்தின் அருளால் நமது கிழங்கு நாட்டு அண்ணன்மார்களிடையே ஏற்பட்ட மன உந்துதல் காரணமாக 27.02.2022 ஆம் நாள் வள்ளியம்மன் கோவிலில், உத்திர நட்சத்திர பூஜையின்போது நடைபெற்ற அண்ணன்மார்களின் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பெரும் பொங்கல் விழா நடத்தப்பட வேண்டும், என்ற முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவினை “தொடர்ந்து 29.05.2022 ஆம் நாள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொங்கல் விழா நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் செலவுகளுக்காக குடி 1 க்கு ரூபாய் 3000/- நிர்ணயம் செய்யப்பட்டது. பிறந்தகத்து பிள்ளைகளிடம் மடி காணிக்கையாக ரூ. 500/- பெற்றுக்கொண்டு அதற்கு மேல் கூடுதலாக பங்களிப்பு செய்து பொங்கல் சீர் பிரசாதப்பை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. விழாவினையொட்டி சிறப்பாக மலர் வெளியிடவும் முடிவு செய்து, கரூர் திரு. R. நடேசன் அவர்கள் தலைமையில் மலர் குழு அமைக்கபட்டது. உபசரிப்பு குழு ஒன்று மேட்டூர் திரு. K. நடேசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது.
மஞ்சள் முடிப்பு நிகழ்வு:
அண்ணன்மார்கள் முடிவு செய்தபடி பொங்கல் விழாவின் முதல் நிகழ்வான மஞ்சள் முடிப்பு நிகழ்ச்சி கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் (5-12-2022) அன்று 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பூசாரியார்கள், முக்கிய பிரமுகர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதர் சன்னதியில் வைத்து வணங்கி எடுத்து வந்த வஸ்திரத்தில் மூன்று அண்ணன்மார்களிடமும் காணிக்கைகள் பெறப்பட்டு, சேர்த்து மஞ்சள் முடிப்பு கட்டி ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற அண்ணன்மார்கள் கூட்டத்தில் விழாவிற்கான அழைப்பிதழ் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. இம் மஞ்சள் முடிப்பு விழாவில் ஆண்களும், பெண்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முதல் நாள் விழா:
பொங்கல் விழா அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு முதல் நாளான 02-03-2023 வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேயே அண்ணன்மார்கள் அனைவரும் குடும்பத்துடனும், மாமன்மார்கள், உற்றார் உறவினரோடும், பொங்கல் பொருட்களோடும் பெருந்திரளாக மோகனூர் வந்து சேர்ந்தனர். அண்ணன்மார்கள் வருகையில் மோகனூர் பகுதியில் கண்ணுக்கெட்டியவரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தனர். அன்று 2-3-2023 காலை 10.00 மணிக்கு கோவிலில் நடைபெற்ற மூன்று அண்ணன்மார்கள் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட குடி வரி மற்றும் பிறந்தகத்து பிள்ளைகள் பழக்காணிக்கை செலுத்தப்பட்டது. அண்ணன்மார்களின் காணிக்கை பொருட்களும் பெற்றுக் கொள்ளப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அறக்கட்டளை நிர்வாகம், அறங்காவலர் உறுப்பினர்கள், கோவில் வீட்டு அதிகாரங்கள் அனைவருக்கும் அடையாள வில்லைகளும் (Badge) வழங்கப்பட்டன.
வேல் கொண்டு வருதல்:
2-02-2023 மதியம் 2 மணி அளவில் புகழூர் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவிலிலிருந்து பூஜை செய்யப்பட்ட வெள்ளிவேலை ஸ்ரீ வள்ளியம்மன் கோவில் பெரிய பூசாரியார், திரு. S. செந்தில்குமார் அவர்கள் மற்ற பூசாரி பெரியதனகாரர்கள், புடைசூழ பக்தி பரவசத்தோடு எடுத்து வந்தார். அதனைத் தொடர்ந்து பரமத்தியிலிருந்து புதிய வேல், பேழைக் கூடை மற்றும் ஈனாப்பிறவியுடன் பரமத்தி அண்ணன்மார்கள் மேளதாளத்தோடு கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பிறந்தகத்து பிள்ளைகள் அழைத்தல்:
மதியம் 2.30 மணியளவில் நமது பொங்கல் விழாவிற்கு பெருந்திரளாக குடும்பத்துடன் வருகைதந்த பிறந்தகத்து பிள்ளைகள் அனைவரையும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் தாம்பூல தட்டுடன் மேளதாளத்தோடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் இருந்து உரிய மரியாதை செய்து அழைத்து வந்தனர்.
முக்கிய பிரமுகர்கள் அழைப்பு :
2-03-2023 மாலை 4.00 மணிக்கு அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் தாம்பூல தட்டுடன் மேளதாளத்தோடு சென்று மோகனூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி தலைவர், காவல் ஆய்வாளர், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று உரிய மாலை மரியாதை செய்து அழைத்து வந்தனர்.
நாடூர் அழைப்பு:
பொங்கல் விழாவில் 2-3-2023 ம் நாள் மாலை 6.00 மணியளவில் நாடூர் அழைப்பு : நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மோகனூர் நகரில் அமைந்துள்ள நமது ஸ்ரீ மாசடச்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக மண்டபத்தின் வெளிப்புறம் முழுவதுமாக மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. நமது மாமன்மார்களையும் மூன்று அண்ணன்மார்களின் அறக்கட்டளை தலைவர் திரு. K. மாணிக்கம் அழைப்பினை ஏற்று பெருந்திரளாக வந்திருந்த நாடூர் அதிகாரப் பொறுப்பாளர்களையும், அவர்கள் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து நாடூர் முறைப்படி பட்டக்காரர்கள், முடிசூடிய கெடிசெட்டுமைக்காரர்கள், செட்டுமைக்காரர்கள் மற்றும் நாட்டுப் பெரியதனம், பூசாரியார்கள் உள்ளிட்ட அனைவரையும் நாடூர் வரிசைப்படி வாசித்து, உரிய வகையில் பொட்டு வரிசை செய்து, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் அனைவரையும் மாலை மரியாதையுடன், மேளதாளத்துடன் சக்தி அழைக்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டது.
சக்தி அழைப்பு:
வழக்கம் போலவே இந்த பொங்கல் விழாவிலும், சின்ன பூசாரி திரு. M. சுப்ரமணியம் அவர்களது இல்லத்தில் இரவு 8.00 மணிஅளவில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் நிர்வாகம் மற்றும் பூசாரியார்களும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து குதிரை சயணம் பெறப்பட்டு சக்தி அழைப்பு பூஜை விமர்சையாக நடைபெற்றது. பூஜை விமர்சையாக நடைபெற்றது. பூஜை நிறைவு செய்த பின் சாமி ஊர்வலமாக கோவிலுக்கு புறப்பட்டது.
சாமி பல்லக்கு ஊர்வலம்:
இதுவரை இல்லாத அளவிலும் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன், சாமி ஊர்வலம் மிகப்பெரிய அளவில் முழுவதும் கல் ஆபரணங்களாலும் பூக்களாலும், அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய பல்லக்கில், புதுப்பிக்கப்பட்ட யானை வாகனத்தின் மீதமர்ந்தபடி மின்னொளி ஜொலிப்புடன் 2-3-2023 இரவு 10 மணிக்கு தொடங்கி ஊர்வலம் நடைபெற்றது. மல்லூர் அண்ணன்மார்களால் செய்யப்பட்ட மேற்படி அலங்காரம் அனைவரும் பாராட்டும்படி அமைந்திருந்தது. ஊர்வலத்தில் முன்னதாக பூஜிக்கப்பட்ட தீர்த்தக் கலசத்துடன் கோவில் பூசாரி யானை மீது அமர்ந்து எடுத்து வந்தார். ஊர்வலத்தில் சிறப்பாக ஆறு வகையான மேளதாளத்துடன், பம்பை, நாதஸ்வரம், தவில், கொட்டுப்பறை, செண்டை மேளம் மற்றும் ஆனைகட்டி மேளம் என களைகட்டியது. இவ்வாத்தியங்களின் இசைக்கேற்ப நமது சமுதாய இளைஞர்கள், பிறந்தகத்து பிள்ளைகள், தாய்மார்கள், அண்ணன்மார்கள், மாமன்மார்கள் என அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். வழியெங்கும் வாணவேடிக்கை களைகட்டியது. அனைவரின் பங்களிப்போடு ஊர்வலம் சிறப்பாக நிறைவடைந்து, கோவிலுக்கு வந்து சேர்ந்தனர் .
பூக்குழி குண்டம் இறங்குதல்:
பூக்குழி குண்டம் இறங்குதல் மற்ற நிகழ்ச்சிகள் போலவே 2-3-2023 இரவு 10.00 மணியளவில் தொடங்கி, 3-3-2023 அதிகாலை 6.00 மணிவரை குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பூக்குழிக்கு உரிய பூஜைகள் செய்து கட்டைகள் அடுக்கப்பட்டன. இந்த ஆண்டு பூக்குழி சற்று அளவில் பெரியதாக இருந்த போதும், அண்ணன்மார்களும், தாய்மார்களும், சகோதரிகளும் பக்தியுடன் திரளாக வந்து இறங்கினர். குண்டத்தின் இருபுறமும் தீயணைப்பு வீரர்கள் இருந்து அவர்களுக்கு உதவினர். குண்டத்தில் இறங்கியவர்கள் பக்தி மற்றும் ஒழுக்கத்தோடு வரிசையாக வந்து இறங்கியது அனைவரையும் பக்திபரவசத்தில் ஆழ்த்தியது.
பொங்கல் வைத்தல்:
தொடர்ந்து 3-3-2023ம் நாள் அதிகாலை 3 மணியளவில் மூன்று அண்ணன்மார்கள் சார்பில் பொங்கல் வைத்து கிடாய்களுக்கு தீர்த்தமிடப்பட்டது. அதன் பின்னர் அண்ணன்மார்கள், அனைவருக்கும் தீர்த்தம் வழங்கப்பட்டது. அண்ணன்மார்கள் அனைவரும் உரிய வழிமுறைகளை கடைபிடித்து பொங்கல் வைத்து கோவிலுக்கு எடுத்து வந்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து வேண்டுதல் வைத்தவர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
மகா பூஜை:
ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் மூலவர் விக்கிரகங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களாலும், அபிஷேக பொருட்களாலும் ஆலய வழக்கப்படி அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் உட்புறம் வெளிப்புறமும், மிகுந்த பொருட்செலவில் பல்வேறு கல்நகை ஆபரணங்களிலும், பூக்களாலும், பழங்களாலும் மயிலிறகினாலும் மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 03.03.2023 வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணியளவில் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் சுவாமி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு மகா பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வரிசையாக நின்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று மகிழ்ந்தனர்.
விழா மலர் வெளியீடு:
02-03-2023 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு மேல் கோவிலுக்கு அருகில் (வடபுறம்)
மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் பொங்கல் விழா மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இம்மலரானது அண்ணன்மார்கள், மாமன்மார்கள் மற்றும் பலரது ஒத்துழைப்போடு கோவில் வரலாறு, சமுதாய ஆவணங்கள், வரலாறு நிகழ்வுகள், கட்டுரைகள், கவிதைகள், விளம்பரங்கள் என வண்ணமயமாக 1200 பக்கங்களுக்கு மேல் கொண்டதாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இம்மலீர் பிரதியை வள்ளியம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் திரு. K.மாணிக்கம் அவர்கள் வெளியிட மலர்குழு தலைவர் திரு. R. நடேசன் அவர்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மலர்குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர். முன்னதாக இம்மலர் உருவாக அரும்பாடுபட்ட மலர் குழு உறுப்பினர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது குறிப்பாக இம்மலரில் கிழங்கு நாட்டு அண்ணன்மார்களின் பட்டியல், அண்ணன்மார்களின் படங்களுடன் குடும்பத் தலைவிகளின் படங்களும் சேர்த்து வெளியிட்டிருந்தது மிகவும் சிறப்பு.
கலை நிகழ்ச்சி:
அதே மேடையில் 2-3-2023 இரவு 9.30 மணிக்கு காவல்துறை அனுமதியோடு மிகப்பெரிய அளவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஆலமரத்துப்பட்டி புடவை அண்ணன்மார்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் கலை நிகழ்ச்சியை கண்டுரசித்தனர்.
ஊஞ்சல் பாட்டு:
மகா பூஜைக்கு 3-3-2023 மாலை 2-30 மணியளவில் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன், சுவாமி கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்து ஸ்ரீ வள்ளியம்மன் தாலாட்டு பாடப்பட்டது. இத் தாலாட்டுப் பாட்டினை ஓமலூர் திரு. சின்னத்தம்பி, பெரியமணலி திரு. அர்ஜுனன், கொண்டரசம்பாளையம் திரு. சண்முகம் ஆகியவர்களுடன் பூசாரியார்களும் சேர்ந்து பாடி சிறப்பித்தனர். ஊஞ்சல் பாட்டுக்கு பின்னர் பூசாரி வரிசை செய்யப்பட்டது. விழாவிற்கு வருகைதந்த பிறந்தகத்து பிள்ளைகள் அனைவருக்கும் பொங்கல் விழாவிற்கான பிரசாதப்பை வழங்கப்பட்டு அனைவருக்கும் கும்பிடு கொடுக்கப்பட்டது.
சிறப்பு ஏற்பாடுகள்:
இப்பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கல், வேலூரிலிருந்து அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. விழா சிறப்பாகவும், நல்ல முறையிலும் நடைபெற தமிழக காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், பக்கபலமாக இருந்து உதவினர். கூடுதலாக சுகாதாரத் துறையினர் அவசரகால மருத்துவ உதவிகளை வழங்கிட தயாராக இருந்தனர். ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் முன்கூட்டியே அனைத்து பகுதிகளையும் சுத்தப்படுத்தி மோகனூரில் தடையில்லாமல் தண்ணீர் வழங்கிட உதவினார்கள். இவர்களுக்கு பொங்கல் நாட்களில் நல்ல உணவையும், உபசரிப்புகளையும் வழங்கினார்கள். உபசரிப்பு குழு தலைவர் மேட்டூர் திரு. K. நடேசன் மற்றும் அவரது குழுவினர்களான டிரஸ்ட்மெம்பர்கள் விழாவை முன்னிட்டு பரமத்தி திரு. சுப்ரமணியம் அவர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் மண்பாண்ட கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மிக நீண்ட தொலைவுக்கு வாகனங்கள், பார்க்கும் இடமெங்கும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தாலும் கூட நம் தாய் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் அருளால் ஊரார் போற்றும் ஒரு வரலாற்று நிகழ்வாக இப் பெரும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. நாம் என்றும் நினைவு கூறத்தக்கது. நாளும் நம் குலதெய்வத்தை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோமாக.